கெயில் திட்டம் குறித்து ஜெ. என்ன செய்யப் போகிறார்?: கருணாநிதி கேள்வி
சென்னை: மாற்றுப் பாதையில் கெயில் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லாத ஒன்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்து முதல்வர் ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கெயில் நிறுவனமானது தனது குழாய்களை விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டும் என திமுக சார்பில் தொடக்கத்திலிருந்து கூறி வருகிறோம்.
இந்த நிலையில், மத்திய அரசின் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசும்போது, "தமிழக அரசும், விவசாயிகளும் விரும்புவதைப் போல, நெடுஞ்சாலைகள் வழியாக உயர் அழுத்தக் குழாய்களைப் பதிப்பது சாத்தியமில்லாத ஒன்று' என்று தெரிவித்துள்ளார். இது தமிழகத்தின் மேற்கு மண்டல விவசாயிகளிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.
தமிழகத்துக்கு மிகவும் துணையாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாகப் பேசியுள்ள முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னை குறித்து உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.