கடல் சங்குகளை ஜெர்மனிக்கு எடுத்துச் செல்ல முயன்ற மாணவருக்கு ரூ.5000 அபராதம்
சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு கடல் சங்குகளை கொண்டு செல்ல முயன்ற ஜெர்மனி கல்லூரி மாணவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஜெர்மனியை சேர்ந்த கல்லூரி மாணவரான கிஸ்க்கைஜான்ஸ் என்பவர் தனது அம்மா மற்றும் தங்கையுடன் சென்னையில் இருந்து ஜெர்மனி செல்வதற்காக வந்து இருந்தார். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் கடல் சங்குகள், சிப்பிகள் மற்றும் பாம்பு சட்டை ஒன்றும் இருந்தது.

இதையடுத்து, அவர்களின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவர்களை கிண்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை வனத்துறை காப்பாளர் கீதாஞ்சலி இது குறித்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.
அப்போது, அவர்கள் 3 பேரும், ஜெர்மனியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாகவும், மைசூரில் சுற்றுலா சென்றபோது அங்கு நல்ல பாம்பு ஒன்று உரித்து போட்டு இருந்த சட்டையை எடுத்ததாகவும், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றியபோது அங்கிருந்த கடல் சங்குகள், சிப்பிகளை எடுத்து வைத்து இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், ஜெர்மனி மாணவர் கிஸ்க் கைஜான்சுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவரிடம் இருந்த கடல் சங்குகள், சிப்பிகள் மற்றும் பாம்பு சட்டையையும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications