வீடு வீடாக.. வீட்டு உபயோக சாமான் தருதாமே அந்த குரூப்.. அசிங்கப்படுகிறது ஆர்.கே.நகர்!
பிரிட்ஜ் வேண்டுமா அல்லது வாஷிங் மெஷின் வேண்டுமா. ஏதாவது ஒன்றை வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்க என்று ஒரு குரூப் ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்து வருகிறதாம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மட்டுமின்றி வீட்டு உபயோக பொருள்களை விநியோகிக்கும் பணிகளையும் அந்த குரூப் தொடங்கியுள்ளதால், ஆர்.கே.நகர் பெரிய அளவில் களங்கப்பட்டு வருகிறதாம்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வழக்கமாக அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் தேர்தல்களில் போட்டியிருக்கும்.
ஆனால் இந்த முறை ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு தற்போது முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளது. இதனால் போட்டி கடுமையாக உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் புகார்
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால்தான் மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க முடியும் என்பதால் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் இந்த தொகுதியில் பணம் விநியோகிப்பதாக ஒருவரை ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் மாறி மாறி புகார்களை கூறி வருகின்றனர்.
கிப்ட் வுவுச்சர்
மொத்தமாக பணமாக கொடுத்தால் போலீஸார் பிடித்து விடுகின்றனர் என்பதால் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு மளிகை பொருள்களை வாங்கி தருகின்றனர். மேலும் பெண்களாக இருந்தால் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு ஆகியவற்றை வழங்கி வாக்கு சேகரிக்கின்றனர்.
லாட்ஜில் பணம் விநியோகம்
பறக்கும் படை சோதனைகளிலிருந்து தப்பிக்க அக்கட்சியினர் வால்டாக்ஸ் சாலையில் உள்ள லாட்ஜில் வைத்து அடையாள அட்டைக்கேற்ப பணம் அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒரு கட்சியினர் வீட்டு உபயோக பொருள்களை மொத்தமாக வாங்கி திருமண மண்டபங்களில் குவித்து வைத்துள்ளதாகவும் அவற்றை நூதனமாக விநியோகிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
மக்களோடு மக்களாக
ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களோடு மக்களாக பழகி வந்தனர். அவர்கள் மக்களிடம் சென்று பிரிட்ஜ் வேண்டுமா அல்லது வாஷிங் மெஷின் வேண்டுமா என்று கேட்டு லிஸ்ட் எடுத்து தருகின்றனர். இவை வாக்காளர்களை மொத்தமாக சென்று சேராமல் சிறிது சிறதாக விநியோகிப்பதால் பறக்கும் படை அதிகாரிகளால் இந்த விநியோகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையாம்.