நமக்கு நாமே பயணத்தில் மு.க. ஸ்டாலினுக்கு மது பாட்டில் கொடுத்த மாணவி!
சென்னை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் மது பாட்டிலை எடுத்துக்கொடுத்த மாணவி ஒருவர், தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடியட்டும்... விடியட்டும் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். குமரியில் தொடங்கிய பயணம் வேலூர் வரை வந்துள்ளது.
போகுமிடங்களில் எல்லாம் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாணவர்கள், தொழிலாளர்களை சந்தித்து உரையாடி வருகிறார். பொதுமக்களின் குறைகளை கேட்பதோடு, திமுக ஆட்சியில் உங்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறி வருகிறார்.
காட்பாடியில் ஸ்டாலின்
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார். காட்பாடி கடைத்தெரு பகுதியை பார்வையிட்ட ஸ்டாலின், ஆட்டோவின் சென்ற பெண்ணிடம் கை குலுக்கினார்.
பேருந்து பயணம்
பேருந்தில் பயணித்த ஸ்டாலின் கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தார். பொதுமக்களிடம் குறை கேட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டு விட்டதாக புகார் தெரிவித்தனர்.
மாணவர்களுடன் உரையாடல்
மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது சில மாணவ மாணவிகள் எழுந்து குறைகளையும், அவருக்கு சில ஆலோசனைகளையும் கூறினர். இதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசினார்.
குவாட்டர் பாட்டில்
ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் போதே, நிவேதிதா என்ற மாணவி எழுந்து, ஸ்டாலினிடம் ஒரு மது பாட்டிலை எடுத்து நீட்டினார். "ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊருக்கான சிறப்பு பொருட்களை உங்களுக்கு பரிசாக கொடுத்திருப்பாங்க. எங்க ஊர்ல சாராயம்தான் பிரபலம் என்றார்.
மதுவிலக்கை அமல்படுத்துக
மது குடித்துதான் எங்கப்பா செத்துப்போனார். எங்க ஊரில் சிறியவர், பெரியவர், பெண்கள் என்று யார் கேட்டாலும் மது கிடைக்கிறது. நீங்க ஆட்சிக்கு வந்தால் உடனே மதுவிலக்கை கொண்டுவாங்க என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்தார்.
திமுக ஆட்சியில் அமல்
கையில் பாட்டிலுடன், கண்களில் கண்ணீருடன் மாணவி வைத்த கோரிக்கையை கேட்ட ஸ்டாலின், ஆறுதல் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்குக் கொண்டு வருவோம் என்று கூறினார். ஸ்டாலினிடம் கல்லூரி மாணவி ஒருவர் மது பாட்டிலுடன் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.