தமிழகத்தில் போராட்டமே கூடாது என்று ரஜினி கூறவில்லையே- ஜி.கே.வாசன்
தமிழகத்தில் போராட்டமே கூடாது என்று ரஜினிகாந்த் கூறவில்லையே என ஜிகே வாசன் தெரிவித்தார்.
கோவில்பட்டி: தமிழகத்தில் போராட்டமே கூடாது என்று ரஜினிகாந்த் கூறவில்லையே என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற ரஜினி தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.அப்போது அவர் கூறுகையில் எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்துவதை மக்கள் கைவிட வேண்டும்.
போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஜிகே வாசன் கருத்து
கோவில்பட்டி அருகே வெம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வந்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடியில் மக்களின் முற்றுகைப் போராட்டத்தின் போது 13 பேரை காக்கா குருவிகளைப் போல போலீஸார் சுட்டுள்ளனர். அரசின் சரியான திட்டமிடல் இல்லாததும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும் தான் இதற்கு காரணம்.
ஸ்டெர்லைட் ஆலை
தமிழகத்தில் 100 சதவீதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து. மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான். இதை யாரும் மறுக்கவில்லை. மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டம் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் அளவிற்கு கொண்டு சென்றது.
பிரதமர் மோடி கருத்து கூறவில்லை
தூத்துக்குடி சம்பவம் குறித்து கைது செய்யபட்ட அனைவரையும் விடுவிப்பதோடு அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு இந்தியாவில் உள்ள எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் பிரதமர் மோடி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது.
டீசல் விலை
தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படாத நிலையே உள்ளது. அரசு மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்ட நினைத்தால் அமைச்சரவையைக் கூட்டி ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவேண்டும், தமிழக அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என்றார் வாசன்.