உள்ளாட்சி் தேர்தல் வரட்டும், சூழ்நிலைக்கேற்ப கூட்டணி முடிவு... பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்பது முக்கியத்துவம் பெறாது. அப்போதையை சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவிமணியன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் முயற்சி எடுத்து பாஜகவின் கீழ் மாற்று மூன்றாவது அணியை அமைத்தார். தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கியது காந்திய மக்கள் கட்சி.
காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால் நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்தார் தமிழருவி மணியன். சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சில நூறு வாக்குகளை மட்டுமே பெற்றனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொது வாழ்வை விட்டுப் போகிறேன் என்று கடிதம் எழுதினார் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்கம்
இந்த நிலையில் திருப்பூர் காந்திய மக்கள் இயக்கத்தினர் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது. அப்போது காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைப்பு
திருப்பூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த லியோ ஜோசப், முத்துக்குமார், வெள்ளியங்கிரி,சண்முகவேல், ஜெகநாதன்,பழனிச்சாமி, லட்சுமணபெருமாள், ராமதாஸ், ராஜன், ஜே.கே தட்சிணாமூர்த்தி, சிவமணி, விஜயகுமார், கணேசன், மகேஷ் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர். தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன், ரஞ்சித் குமார், ஜயப்பன், முரளி, வழக்கறிஞர் சுப்புராஜ் ஆகியோரும்
பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியளார்களிடம் பேசினார். அப்போது அவர், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார். புதியவர்களுக்கு என்றுமே பாஜக வரவேற்பு அளிக்கும் என்ற கூறினார்.
வழக்கு தொடர்ந்தோம்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்றார். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இதற்கு தீர்வு தேடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தகுந்த ஒத்துழைப்பை மாநில அரசு கொடுத்து இருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
கச்சத்தீவை மீட்போம்
இது இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். அண்டை நாட்டுடன் உள்ள நட்பு தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் வகையில் இலங்கை அரசின் செயல்பாடு அமைந்தால் கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தயங்காது என்றும் பொன் ராதாகிருஷணன் கூறினார்.
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்பது முக்கியத்துவம் பெறாது. அந்த பகுதியின் பிரச்சினைகள், வேட்பாளர் மற்றும் கட்சியின் பலமும் சேர்ந்தே வெற்றியை தரும். அப்போதையை சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்கப்படும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.