தமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற ‘தனித்துப் போட்டி’ ஒரு வாய்ப்பு: ஞானதேசிகன்
சென்னை: தனித்துப் போட்டியிட கிடைத்த வாய்ப்பை தமிழகத்தில் கால் ஊன்ற ஒரு வாய்ப்பாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் ஓரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி தலைமையில் பெண் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
மேலும், அப்போது அவர்கள் லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளார்களைச் சந்தித்த ஞானதேசிகன், ‘காங்கிரஸ் பெண் தொண்டர்களின் கோரிக்கை மனு மேலிடத்துக்கு அனுப்பப்படும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போடுவதால் பயம் இல்லை. இதை, தமிழகத்தில் காங்கிரஸ் கால் ஊன்ற ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் மதுரைக்கு செல்லும்போது அழகிரியை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசுவேன்'' என்றார்.