ஒரே நாளில் 10 பெண்களிடம் 50 சவரன் கொள்ளை... சென்னை பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்
சென்னையின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், ஒரே நாளில் 10 பெண்களிடம் 50 சவரன் தங்க செயின்களை பைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதனால் சென்னைப் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
சென்னை: சென்னையில் ஒரே நாளில், 10 பெண்களிடம், 50 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இந்தக் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதால் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

மைலாப்பூர், புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில், வேகமாக வந்த நபர்கள், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் போகிற போக்கில், பாதசாரிகளிடம் இருந்து, நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
மைலாப்பூரில், சாந்தோம் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற கணவன், மனைவியிடம் இருந்து, தங்கச் சங்கிலியை பைக்கில் வந்த நபர்கள் பறித்துச் சென்றனர். இதன்பேரில், அவர்கள் போலீசாரிடம் அளித்த புகாரில், சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
அதே போல, அண்ணா நகர் கிழக்குப் பகுதியை சேர்ந்த சுதா என்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர்கள், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றனர். இதுபற்றி அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர்ந்து, அண்ணா நகரில் ஆர்வி நகரைச் சேர்ந்த சூர்யபிரபா என்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதேப்போன்று, டிபி சத்திரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, மூலக்கடை உள்ளிட்ட இடங்களிலும், தனியாக நடந்து சென்ற பெண்களைக் குறிவைத்து, பைக் ஆசாமிகள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் சென்னை போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஒரே நாளில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications