வளர்மதி மீது குண்டர் சட்டம்...மத்திய அரசின் நெருக்கடி காரணமா? முத்தரசன் கேள்வி
சென்னை: சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்த நெருக்கடியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை!
" பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி வளர்மதி அவர்கள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார் என்பதற்காகவும், முன்னர் மத்திய அமைச்சர் மீது காலனி வீசிய நபருடனும், நச்சலைட்டுகளுடனும் போராட்ட தொடர்புகள் இருப்பதாகவும் கூறி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல என்பதுடன் கடும் கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
தமிழக அரசு மத்திய அரசின் நிர்பந்தங்களுக்காக இத்ததைய நடவடிக்கைகளை எடுக்கிறதா? அல்லது ஜனநாயகத்தை மீறும் எதேச்சதிகார பாதையில் பயணிக்க துணிந்து விட்டதா என தமிழக ஆட்சியாளர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.
அத்துடன் கூட்டம் கூடும் உரிமை, கருத்துகளை பரப்பும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என அரசியல் சாசன உரிமைகள் மீதான தாக்குதலாக இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
எனவே வளர்மதி மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதோடு, அவர்களை உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
Recommended Video
மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் இயக்கத்தினரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார் முத்தரசன்.