சுகாதார முறையில் உணவு சமைக்காத நாமக்கல் மாணவிகள் விடுதி "குக்" சஸ்பெண்ட்!
நாமக்கல்: நாமக்கல்லில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யாத அரசு மாணவியர் விடுதி சமையலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தை அடுத்துள்ள முள்ளுக்குறிச்சியில் உள்ள தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் அப்பகுதியை சேர்ந்த மாணவியர் தங்கி அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த விடுதியின் சமையலர் திலகவதி என்பவர் மாணவியருக்கு உரிய நேரத்தில் சமையல் செய்து தருவதில்லை என்ற புகார் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்திக்கு சென்றது.
மேலும், விடுதியில் தங்கி படிக்கும் சில மாணவியர் நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவில் சுகாதாரமற்று இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, முள்ளுக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பான முறையில் சமைக்கப்படாத உணவுகளை உட்கொண்டதால் மாணவியர் உடல்நலம் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக, சமையலர் திலகவதியை மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அறிவுரையின் பேரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கருப்பையா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.