காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியார்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
காஞ்சிபுரம் வந்த ஆளுநர் பன்வரிலால் புரோஹித், சங்கர மடத்தில் விஜயேந்திரர் மற்றும் ஜெயேந்திரரை சந்தித்து பேசினார்.
காஞ்சிபுரம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தில் விஜயேந்திரர் மற்றும் ஜெயேந்திரரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதோடு, ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாவட்டத் தலைநகரங்களில் தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு நடந்து வருகிறது என்றும், அங்குள்ள நிர்வாகப்பணிகளின் தற்போதைய நிலைமை குறித்தும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கோவை மாவட்டத்தில் முதன்முறையாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் பன்வாரிலால். இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்று திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உட்பட பல கட்சிகள் ஆரம்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், ஆளுநரின் சுற்றுப்பயணத்தில் இதுவரை மாற்றம் ஏதும் இல்லை.
திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர், சேலம், வேலூர் என்று மாவட்டவாரியாக ஆய்வு மேற்கொண்ட பன்வாரிலால், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வுசெய்ய, இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அப்போது அளுநருக்கு எதிராக முழக்கமிட்ட திமுகவினர் அவரது காரின் முன்பு கறுப்புக்கொடிகளை வீசினார்கள். உடனடியாக காவல்துறையினர் கறுப்புக்கொடிகளை அகற்றினார்கள். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.
மாலையில் சங்கரமடத்திற்கு வந்தார் பன்வாரிலால், அங்கு ஜெயேந்திரர், விஜயேந்திரரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.