மழைக்காலம் முடியும் வரை நோ லீவ்... நோயாளிகளை கனிவோடு கவனிங்க: அரசு டாக்டர்களுக்கு உத்தரவு
சென்னை: மழைக்காலம் முடியும் வரை அரசு மருத்துவர்களுக்கு தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது என மருத்துவநலப் பணிகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதிகளவு நோயாளிகள் வருவதால் வேலைப்பளு மிகுதியால் நோயாளிகளிடம் கோபத்துடன் பேசக்கூடாது, கனிவுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பருவம் தவறி பெய்வதால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெரியவர்கள், குழந்தைகளுக்கு மர்மக் காய் ச்ச்சல், மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, டைபாய்டு, சளி, டெங்கு மற்றும் பிற காய்ச்சல்கள் வேகமாக பரவுகின்றன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, உசிலம் பட்டி, திருமங்கலம், பேரையூர், சமயநல்லூர், வாடிப்பட்டி, மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு வழக்கத்தைவிட அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 200 சுகாதார களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வார்டு வாரியாக சென்று மழை நீர் தேங்கும் பகுதியில் தண்ணீரை லாரிகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நகராட்சிகள், பெரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகளில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொசு உற்பத்தி செய்யும் அரசு, தனியார் கட்டிடங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு எந்நேரமும் சிகிச்சையளிக்க வசதியாக மருத்துவர்களுக்கு தேவையில்லாமல் விடுமுறை வழங்கக் கூடாது என மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கு உத்தர விட்டுள்ளது.
தற்போது அதிகளவு நோயாளிகள் வருவதால் வேலைப்பளு மிகுதியால் நோயாளிகளிடம் கோபத்துடன் பேசக்கூடாது என்றும், கனிவுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. மருந்துகள் போதுமான அளவில் உள்ளதால் எவ்வளவு நோயாளிகள் வந்தாலும் சிகிச்சையளிப்பதில் சிக்கல் இல்லை என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.