5 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய அம்மா அரசு போன்று வேறு எந்த அரசாலும் முடியாது: நடிகர் சித்தார்த்
கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மக்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் பேராசைக்காரர்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் திருடப்படுகிறது என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் நடிகர் சித்தார்த் ஆர். ஜே. பாலாஜி மற்றும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து மக்களை மீட்டதுடன், நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகிறார். மேலும் ட்விட்டர் மூலம் உதவி கேட்பவர்களையும் கண்டுபிடித்து நிவாரணப் பொருட்கள் அளிக்கிறார்.
தற்போது கடலூரில் நிவாரணப் பணிகளில் இருக்கும் சித்தார்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வெள்ளம்
என் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வெள்ளநீரை வெளியேற்றிய பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை தான் மின்வினியோகம் சீரானது.
சமூக வலைதளம்
முதல்முறையாக இயற்கை பேரிடரின்போது பாதிக்கப்பட்டவர்களை விட அவர்களுக்கு உதவுவோர் அதிக அளவில் உள்ளனர். இதற்கு காரணம் சமூக வலைதளங்கள்.
சாபமும் கூட
நிவாரணப் பணிகளில் சமூக வலைதளங்கள் வரமும், சாபமும் கூட. காரணம் யாராவது 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் வேண்டும் என்று தெரிவித்த தகவல் 6 நாட்கள் கழித்தும் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும். அப்போது அவர்களுக்கு தண்ணீர் அல்ல மாறாக தண்ணீர் பாட்டில்களை தூக்கிப் போட குப்பைத் தொட்டிகள் தேவையாக இருக்கும்.
கடலூர்
கடலூரில் நிலைமை மோசம் தான். ஆனால் சமூக வலைதளங்களில் சொல்லும் அளவிற்கு மோசம் இல்லை.
உணவு
தற்போது தேவைப்படுபவது பெரிய கன்டெய்னர்களில் உணவு அல்ல. ஏனென்றால் உணவு ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை தேவைப்படுபவர்கள் அல்ல மாறாக பேராசைக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிமறித்து திருடுகிறார்கள். தற்போது படுக்கை, போர்வை, கூடாரங்கள் தான் தேவை.
தமிழக அரசு
தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் எந்த குறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் அரசுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை. அருமையாக செயல்பட்டு 5 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய வேறு எந்த மாநில அரசாலும் முடியாது என்று நினைக்கிறேன்.