ஒரே நாளில் யூஜிசி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: தமிழக மாணவர்கள் குழப்பம்
சென்னை: ஒரே நாளில் யூஜிசி நெட் தேர்வும், டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வும் நடப்பதால் எந்தத் தேர்வை எழுதுவது என்பது தெரியாமல் தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வு (நெட்) ஜூன் 29-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பதவிகளில் 2,846 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2-ஏ தேர்வும் அதே நாளில் (ஜூன் 29) நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்கின்றனர்.
முதலில் மே 18-ம் தேதி நடத்தப்படுவதாக இருந்த தேர்வு மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. குரூப்-2-ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கணிசமான தேர்வர்கள் யூஜிசி நெட் தகுதித்தேர்வுக்கும் விண்ணப்பித் துள்ளனர். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வை தள்ளிவைப்பது என்பது சிரமம். எனவே, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குரூப்-2-ஏ தேர்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக, தகுந்த காரணங்களை முன்வைத்து தேர்வு தேதியை மாற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், அதுகுறித்து டிஎன்பிஎஸ்சி பரிசீலனை செய்து தேர்வு தேதியை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.