வேட்புமனு நிராகரிப்புக்கு நான் மட்டுமே காரணம் அல்ல: நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி
சென்னை: என் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு நான் மட்டும் காரணம் அல்ல என்று பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ள குருமூர்த்தி கூறியுள்ளார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட குருமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுவுடன் கட்சியின் அங்கீகார கடிதம் இணைக்கப்படாததால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மூவர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் குருமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அறிக்கையை கட்சித் தலைமையிடம் வழங்கினர்.
அதன் அடிப்படையில் குருமூர்த்தி, முதன்மை முகவர் வரதராஜன் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது குறித்து குருமூர்த்தி கூறியதாவது:
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக என்னை சென்னைக்கு அழைத்து மூவர் குழுவினர் விசாரணை நடத்தினார்கள். என் விளக்கத்தை எழுதி வாங்கினர். அதன் பின்னர் என்னை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். விசாரணை முடிந்ததும் மீண்டும் என்னை கட்சியில் இணைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
நீலகிரி பெரிய தொகுதி என்பதால், வேட்பாளராக நான் பிரசாரத்தில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும் என்ற காரணத்தால் வேட்பு மனு தயாரிப்பது, சரிபார்ப்பது, தேர்தல் அலுவலரிடம் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் முகவராக எங்கள் கட்சியைச் சேர்ந்த வரதராஜன் நியமிக்கப்பட்டார்.
அவர் தவிர அந்த பணிகளை கண்காணிக்க கட்சியின் மாநில துணை தலைவர் திருமலைசாமி, கோட்ட பொறுப்பாளர் செல்வகுமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். எனவே என் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. அவர்களுக்கும் பொறுப்பு உண்டு. இதை கட்சியின் விசாரணை குழுவிடம் தெரிவித்தேன்.
கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு பேட்டியில், என் மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் மாநில தலைமை கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
என் மீது மட்டும் தவறு இருந்தால் அவர் என்னை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கலாம். இந்த தவறுக்கு என்னை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை என்பதை நான் திரும்பவும் சொல்ல முடியும். நான் சாகும் வரை பாரதீய ஜனதாவில் தான் இருப்பேன். நான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறப்படுவது வெறும் வதந்திதான் என்று குருமூர்த்தி கூறினார்.
அதேசமயம் தவறு செய்தவர்கள் மீது கட்சி இதுபோன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என்று ஊட்டி நகர பாஜக தலைவர் மயில்சாமி கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் துணை போயுள்ள நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் வருங்காலங்களில் நடக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி மற்றும் வரதராஜன் மீது தலைமை எடுத்துள்ள முடிவு மிகவும் சரியான முடிவு. மோடி அலை உள்ள நிலையில் குருமூர்த்தி எளிதாக நீலகிரியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போது நாங்கள் வருத்தம் அடைந்தோம் என்றார்.