திராவிட மண்ணில் ஆன்மீக அரசியல்... சபாஷ் போடும் எச். ராஜா!
திராவிட மண்ணில் ஆன்மீக அரசியல் சபாஷ் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவீட் போட்டுள்ளார்.
சென்னை : தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண் ஆனால் இங்கு ஆன்மீக அரசியல், சபாஷ் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவீட்டியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பாஜகவினர் உள்பட அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி மட்டும் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி இருக்கிறார், அவரிடம் கொள்கைகள் இல்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் வேறு மாநிலத்திற்கு செல்வேன் என்றெல்லாம் கூறி இருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த எச். ராஜா, ரஜினியின் ஆன்மீக அரசியலை சுட்டிக்காட்டி ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அவர் பாராட்களையும் தெரிவித்திருந்தார்.
பாராட்டு
நேற்றைய டுவீட்டில் தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த மண். இடைப்பட்ட காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து. ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது என்று ராஜா கூறி இருந்தார்.
திராவிட கட்சிகளை வம்புக்கு இழுத்து
இதனிடையே இன்று திராவிட கட்சிகளை வம்புக்கு இழுத்து எச். ராஜா டுவீட் போட்டுள்ளார். அதில் "இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண் என்று டுவீட்டியுள்ளார்.
|
ஆன்மீக அரசியலுக்கு சபாஷ்
"அடியேமீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண் ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்" என்று எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
ராஜாவிற்கு எதிர்ப்பு
எச். ராஜாவின் இந்த டூவீட்டுக்கு பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம் இது ஒரு நல்ல துவக்கமாக அமையட்டும்! நாத்திக வாதம்,இந்து துவேஷம் தேவைக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதால் அது தனக்கு அழிவை தேடிக்கொண்டது என்று சிலர் ராஜாதவிற்கு ஆதரவான பதில்களையும் பதிவிட்டு வருகின்றனர்.