வரம்பு மீறிப் பேசும் எச்.ராஜா.. திருமுருகன் காந்தியை நக்சல் தலைவர் என்கிறார்!
நக்சலைட் தலைவர் திருமுருகன் காந்தி கைது குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹெச் ராஜா டிவிட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை நக்சலைட் தலைவர் என ஹெச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹெச் ராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்திய வழக்கில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதற்கு ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
திருமுருகன் காந்தி நக்சலைட்?
இந்நிலையில் துடுக்குத்தனமாக பேசி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா திருமுருகன் காந்தி தொடர்பாக டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது திருமுருகன் காந்தியை நக்சலைட் என குறிப்பிட்டுள்ளார்.
|
இந்த புகழ் முதல்வருக்கே..
நக்சலைட் தலைவர் திருமுருகன் காந்தி குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகழ் தமிழக முதல்வருக்கே என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சிலர் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹெச் ராஜாவுக்கு கண்டனம்
ஹெச் ராஜாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளர். இன உரிமைக்காக போராடுபவர்களை நக்சலைட் என எப்படி கூறலாம் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றனர்.
ஏற்கனவே சர்ச்சை..
ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை தேசத்துரோகி என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளக்காரி, இத்தாலிக்காரி என்றும் வசை மாரி பொழிந்து சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியினர் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.