கருணாநிதியை சந்தித்ததில் பெரும் "மகிழ்ச்சி".... நேரில் சந்தித்த பின் ராகுல் காந்தி
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியின் உடல்நிலை சரியாகி வருவதாகவும் அவர் கூறினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடைபெற்ற அவரது வைரவிழாவில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் பலர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக சென்னையில் தங்கியிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது கருணாநிதிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.
நேரில் சந்தித்தது மகிழ்ச்சி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தது பெருமையாக உள்ளது என்றார்
மீண்டும் வரவேண்டும்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்து செய்தியையும் அவரிடம் தெரிவித்தேன். அவரது உடல் நலம் தேறி வருவது சந்தோசமாக இருக்கிறது. மீண்டும் அவர் 100 சதவீத உடல் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் தவறான அணுகுமுறை
மேலும் காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு தவறான அணுகு முறையை கையாண்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு சோதனைகளை நடத்துகிறது என்றும் அவர் கூறினார். காஷ்மீரில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் சரியான அணுகு முறை அல்ல என்றும ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
அமைச்சரிடம் எச்சரித்தும்..
மேலும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பேசி இருந்தேன்.
ஆனாலும் அவர்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் அவர்கள் எடுத்து வரும் முடிவுகள் தவறாக உள்ளது.
வலிமை மிக்க மாநிலம்
காஷ்மீர் இந்தியாவின் வலிமைமிக்க மாநிலமாகும். அங்கு எடுக்கும் முடிவுகள் காஷ்மீருக்கு வலிமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கூறினார்.