நளினி மகள் அரித்ரா சென்னை வருகிறார்.. தாய், தந்தையை சந்திக்கத் திட்டம்
சென்னை:முருகன்- நளினி தம்பதியின் மகளான அரித்ரா தனது பெற்றோரைக் காண சென்னை வரவிருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
விடுதலைக்கு காத்திருக்கும் தமிழர்கள்:
இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. இருப்பினும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 7 பேருமே தங்களது விடுதலைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். முருகனும், நளினியும், புதுமணத் தம்பதிகளாகியிருந்த நேரத்தில் தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
5மாத கர்ப்பிணி:
விசாரணை கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தையை சுமந்தபடியே கடுமையான வலியுடன் காலம் தள்ளினார் நளினி.
சிறையில் பிறந்த அரிதிரா:
சிறையிலேயே நளினி குழந்தையை பெற்றெடுத்தார்.அக்குழந்தைக்கு அரித்ரா என்று பெயரிட்டனர். சிறையில் பூத்த மலரான அரித்ராவுக்கு இரண்டரை வயது இருக்கும் போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள்..
முடிந்த வனவாசம்:
இதற்கு மேலும் தங்களது குழந்தை வெளி உலகமே தெரியாமல் சிறைக்குள் வளர வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள் அரித்ராவை வெளியில் தங்களது உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டனர்.
ஈழம் சென்ற அரித்ரா:
இதன் பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் அரித்ராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து அரித்ராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்றார்.
மருத்துவம் படிக்கும் அரித்ரா:
அவர் தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார். மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வரும் அரித்ரா பெற்றோரின் விடுதலைச் செய்தியால் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார்.
சென்னை வருகை:
நளினி-முருகனின் விடுதலைக்காக காத்திருக்கும் அரித்ரா அவர்களை சந்திப்பதற்காக சென்னை வருகிறார்.நளினியும், முருகனும் விடுதலையாகும் தேதி தெரிந்த பின்னர், அரித்ராவின் பயண தேதி திட்ட மிடப்பட உள்ளதாம்.
முதல் சந்திப்பு:
சென்னை வரும் அவர் தனது பெற்றோரின் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். விவரம் தெரிந்த பின்னர் தனது தாய், தந்தையை சிறைக்கு வெளியில் வைத்து முதன் முதலாக சந்திக்க உள்ளார் அரித்ரா. எனவே, அவர் சென்னை வரும் போது சிறப்பான வரவேற்பு அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் திட்மிட்டுள்ளனர்.
லண்டனில் குடியேற்றம்:
விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் அரித்ராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது.. அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
நடைமுறை சிக்கல்கள்:
பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.
முறைப்படி கோரிக்கை:
இது தொடர்பாக அவர் "முருகனும், நளினியும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு அந்நாட்டின் அனுமதியை பெற வேண்டும். பாஸ்போர்ட், விசா போன்றவற்றை எடுக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களின் போது தமிழக அரசின் உதவியும் தேவைப்படும். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் முருகனும், நளினியும் இது தொடர்பாக முதல்வருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்" என்றார்.
முதல்வருக்கு நன்றி:
நேற்று வேலூர் சிறைக்கு சென்று முருகனையும், நளினியையும் வக்கீல் புகழேந்தி, சென்று பார்த்தார். அப்போது இருவரும் தங்களது விடுதலை செய்ய போவதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவு அளித்த மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.