''மிஸ்டர் ராமசாமி.. நீங்க கொ.நா.மு.க. பெயர், கொடியை பயன்படுத்தப்படாது...!''
சென்னை: கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும், கட்சிக் கொடியையும் பயன்படுத்த பெஸ்ட் ராமசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியின் தலைவராக பெஸ்ட் ராமசாமியும், பொதுச் செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரனும் செயல்பட்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்தனர்.
ஈஸ்வரன் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஈஸ்வரன் தொடங்கினார்.
இதற்கிடையில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் என்ற பெயர் மற்றும் கொடியை கட்சித் தலைவர் என்ற பெயரில் பெஸ்ட் ராமசாமி பயன்படுத்தி வந்ததையடுத்து ஈரோடு கோர்ட்டில் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திங்கட்கிழமையன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் அளித்த தீர்ப்பில், கட்சி விதிகளின்படி பெஸ்ட் ராமசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும், கட்சி கொடியையோ, பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார்.