அழகிரியின் மனைவிக்கு எதிரான நில மோடி புகார்: விசாரணை ஒத்திவைப்பு
மதுரை: முறைகேடாக நிலத்தை வாங்கிய புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காந்தி அழகிரிக்கு எதிரான நிலமோசடி புகார் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளார் மதுரை திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காந்தி அழகிரிக்கு எதிராக சிவரக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் எனது கணவர் ராமமூர்த்தி 2014ல் உயிரிழந்து விட்டார். சிவரக்கோட்டையில் கணவரின் குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீகச் சொத்து 25 சென்ட் நிலம் இருந்தது. சொத்தில் அவரது பங்கை பராமரிப்பதற்காக நிலம் பற்றி 2014 அக்டோபர்17ல் வில்லங்கச் சான்று பெற்றேன். அதில் மதுரையில் உள்ள தயா சைபர் பார்க் நிறுவனத்திற்காக அதன் நிர்வாக இயக்குனர் காந்தி அழகிரி பெயரில் சொத்துக்கள் கிரையம் செய்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். பாண்டியராஜன் என்ற ஏஜன்ட் மூலம் கிரையம் செய்துள்ளனர். வில்லங்கச் சான்றில் எனது கணவர் மைனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது மாமியார் துரோபதையம்மாள், மைத்துனர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள்,'நிலத்தை விற்க உனது கணவர் சம்மதிக்கவில்லை. தயா சைபர் பார்க் நிறுவனத்தார் கூறியபடி அவர் மைனர் எனக்கூறி விற்பனை செய்தோம். இது பெரிய இடத்து விவகாரம்,' என கொலை மிரட்டல் விடுத்தனர். எனது கணவருக்கு சேர வேண்டிய பங்கை அபகரித்ததோடு, அவர் மைனர் எனக்காட்டி மோசடியாக பத்திரம் பதிவு செய்து கூட்டுச் சேர்ந்து ஏமாற்றிய துரோபதையம்மாள், ராஜேந்திரன், பாண்டியராஜன் மற்றும் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை எஸ்.பி.,யிடம் பிப்ரவரி 3ம் தேதி புகார் செய்தேன். அவர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு அனுப்பினார். அவர் மார்ச் 2ம் தேதி விசாரித்தார். நடவடிக்கை இல்லை. வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஆஜாரன அரசு தரப்பு வழக்கறிஞர், காவல் துறை கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இதையடுத்து, மனு மீதான விசாரணை வருகிற 13.ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காந்தி அழகிரிக்கு எதிரான நிலமோசடி புகார் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளார் மதுரை திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.