அண்ணா நூலக பராமரிப்பு: பள்ளிகல்வித்துறை செயலாளருக்கு ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் அண்ணா நூலகத்தை பராமரிக்கவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" கட்டப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், வழக்கறிஞர்கள் ஆஷா, சுதந்தரம் ஆகியோரை சட்ட கமிஷனர்களாக நியமித்து நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த சட்ட கமிஷனர்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையை சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்யவேண்டும் என்றும் நூலக வளாகத்தில் உள்ள கருத்தரங்களை வாடகைக்கு விட்டு வருமானத்தை ஏன் உருவாக்கக்கூடாது என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர்கள் கமிஷனர்கள் ஆஷா, சுந்தரம் ஆகியோர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் கடந்த வாரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த ஹைகோர்ட்டு உத்தரவிட்ட பின்னர் நூலகத்தில் உள்ள அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தியுள்ளது. ஆனால் கருத்தரங்கம், கூட்டரங்கம் ஆகியவை மூடிய நிலையிலேயே உள்ளது. அதை பொது பயன்பாட்டிற்கு விடவில்லை என்று கூறினார்கள்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுக்க வேண்டும். காணாமல் போன புத்தகத்தை கண்டு பிடிக்கவும், புதிய புத்தகங்ளை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முன்பை விட தற்போது மேம்பட்டிருந்தாலும், அந்த வசதிகளை முழு அளவில் செய்துக் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை எல்லாம் செய்துக் கொடுக்கவில்லை என்றால், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளரை நேரில் ஆஜராக நாங்கள் உத்தரவிட வேண்டியது வரும். வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.