ஆட்டோ கட்டண நிர்ணயம்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம் ஏன்… தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: சட்டத்தை அமல்படுத்துபவர்கள் ஆட்டோக்களின் உரிமையாளர்களாக இருப்பதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு காலதாமதம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் லோகநாதன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆட்டோ மீட்டர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்த தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய முடியாது என்றும் 2 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அனைத்து கோரிக்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநராயணன் அமர்வு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் ஆட்டோக்களின் உரிமையாளர்களாக இருப்பதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காலதாமதம் செய்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து விரிவான அறிக்கையை அக்டோபர் 8ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.