சென்னையில் விடிய விடிய கனமழை- வெள்ளக்காடான புறநகர்கள்- இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழையால் இயல்பு வாழ்க்ப்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கின்றன. கனமழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சென்னையில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்திருந்தது. பின்னர் மெதுமெதுவாக கொட்டத் தொடங்கிய கனமழை விடிய விடிய நீடித்தது.
சென்னை வேளச்சேரியில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. இக்கனமழையால் சென்னை மெரினா கடற்கரை முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
சாலைகளில் வெள்ளம்
சென்னையின் பிரதான சாலைகள் பலவற்றிலும் முழங்கால் அளவுக்கு மேலாக வெள்ள நீர் தேங்கி இருக்கிறது. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை முடக்கம்
மடிப்பாக்கம், வேளச்சேரி, மேற்கு தாம்பரம், முடிச்சூர், ஆவடி, அம்பத்தூர், தண்டையார்பேட்டை என பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீரும் கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னையில் கடைகள் காலையில் திறக்க தாமதமானதால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடிப் போயினர்.
ரயில் சேவை பாதிப்பு
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் குறைவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெறிச்சோடிய சாலைகள்
தேனாம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாலைகளில் சாய்ந்து விழுந்தன. மழைவெள்ள நீர் தேங்கியிருப்பதால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடித்தான் காணப்படுகிறது.