கொட்டும் கனமழை... ஆறுகளில் பெருகும் வெள்ளம்... நிரம்பும் அணைகள்
சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மளமளவென அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததையொட்டி, சூரியம்பாளையம், ஏமப்பள்ளி, ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேறியது.
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சின்னப்பநாயக்கன்பாளையம், கூட்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை தண்ணீர் சூழந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
வெள்ளச்சேதார பகுதிகளை பார்வையிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கமணி, பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்வரத்து, 20,500 கனஅடியிலிருந்து 40 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 13,956 கன அடியாக இருந்த, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து 40, 261 கன அடியாக அதிகரித்துள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஓரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. தமிழக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பருவ மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 126 புள்ளி 40 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 49 புள்ளி 34 அடியாகவும், அமராவதி அணையின் நீர்மட்டம் 58 புள்ளி 76 அடியாகவும் உள்ளது. சோத்துப்பாறை அணையில் 126 புள்ளி 28 அடி தண்ணீர் உள்ளது.57 அடி கொள்ளளவு கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 80 அடியாகவுள்ளது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட அணைகள்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 புள்ளி 70 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74புள்ளி 5 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54 புள்ளி 12 அடியையும் எட்டியுள்ளது.