சீர்காழியில் ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு கொட்டித் தீர்த்த மழை
சீர்காழியில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது.
சீர்காழி: நாகை மாவட்டம், சீர்காழியில் நேற்று மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்நிலையில் வளி மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நிலை கொண்டுள்ளதால் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியதால் சாலைகள் குளம் போல் தேங்கின. மேடு, பள்ளம் தெரியாமல் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை நிலவரப்படி சீர்காழியில் பலத்த மழை பெய்துள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் கொள்ளிடத்தில் 22.5 செ.மீ, மணல்மேட்டில் 13, திருப்பூண்டியில் 12, தலைஞாயிறில் 10.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 11.5 செ.மீ. மழை பதிவாகியது.