தமிழக எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி! காரணம் இதுதான்
மதுரை: தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு முடிவை ரத்து செய்ய கோரிய மனுவை மதுரை ஹைகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
எம்எல்ஏக்கள் சம்பளத்தை இரட்டிப் பாக்கும் வகையில் சமீபத்தில், தமிழக அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

ஒரு மாதத்துக்கு சம்பளம் மற்றும் இதரப் படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், மின் வாரியம் உள்ளிட்ட பல அரசுத்துறைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
தமிழக அரசு ரூ.45 ஆயிரத்து 119 கோடி கடன் சுமையில் உள்ளது. எனவே சட்டசபை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. எனவே சம்பள உயர்வை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர், சம்பள உயர்வை எதிர்க்கும் சட்டப்பூர்வ காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை என கூறிய ஹைகோர்ட், அந்த மனுவை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications