பணக்காரர்களை மேலும் பணத்தால் குளிப்பாட்டவே இந்த பட்ஜெட்.. வேல்முருகன் ஆவேசம்
பணக்காரர்களை மேலும் பணத்தால் குளிப்பாட்டவே இந்த பட்ஜெட் என்று வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : பணக்காரர்களை மேலும் பணத்தால் குளிப்பாட்டவும், கார்ப்பொரேட்டுகளுக்கான ஏழை எளிய மக்களை கசக்கிப் பிழியவும் தான் இந்த பட்ஜெட் உதவும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் குறித்த விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து தமிழக வாழ்வுரிமைத் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்த அறிக்கை ஏழை எளிய மக்களுக்கானது இல்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பொருளியல் சார்பு இல்லை
மேலும் அந்த அறிக்கையில், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் பாஜக படைத்திருக்கும் இந்த 2018-19 ஆண்டின் ஒன்றிய பட்ஜெட், வெற்று அறிவிப்புகளையும் ஆரூடங்களையும் கொண்டிருக்கிறதேயன்றி உருப்படியான, ஆக்கப்பூர்வமான விடயங்கள் ஏதுமில்லை. முதலில், இந்த நாட்டின் பொருளியல், உற்பத்தி சார்ந்ததாக இல்லை என்பது தெரிந்த விடயம்; ஆனால் அதனை ஊக்குவிக்கும் எந்த ஏற்பாடுமே இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
வேலையின்மை போக்க திட்டங்கள் ?
தனக்கு வருவாயை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் சுங்க வரியை பட்ஜெட்டில் அதிகரித்திருக்கிறது மோடி அரசு. ஓரளவு உள்நாட்டு உற்பத்திக்கும் காரணமாக இருப்பது சிறு குறு தொழில்களாகும். அந்த சிறு குறு தொழில்களை வாழவைக்க இந்த பட்ஜெட்டில் எதுவும் செய்யப்படவில்லை. நாட்டை தொடர்ந்து வாட்டும் பிரச்சனை வேலையின்மையாகும். அதனைப் போக்க பட்ஜெட்டில் திட்டங்களே இல்லை என்பதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
பணவீக்கம் அதிகரிக்கும்
நாட்டின் முதன்மைத் தொழில் இன்றும் விவசாயம்தான். 65 சதவீத மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் விவசாயத்திற்கென வெறும் 22 ஆயிரம் கோடியே அறிவித்து, 2022ஆம் ஆண்டில் விளைபொருட்கள் இருமடங்காகும் என ஆரூடம் கூறி கடந்து செல்கிறது பட்ஜெட். நிதிப்பற்றாக்குறை கடந்த ஆண்டு 3.25 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டில் 3.5 சதவீதமாக உயர்ந்திருப்பதை இந்த பட்ஜெட் ஏற்கிறது. அதைச் சரிக்கட்ட ரூபாய் நோட்டுதான் அச்சடிக்க வேண்டியிருக்கும். அதனால் பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி மேலும் உயரவே வாய்ப்பு ஏற்படும்.
பணத்தால் குளிப்பாட்டும் பட்ஜெட்
ஏழை எளிய அடித்தட்டு உழைக்கும் மக்களைக் கைதூக்கிவிடும் விதத்திலான எந்தத் திட்டமும் பாஜகவின் பட்ஜெட்டில் இடம்பெறாது என்பது இந்த பட்ஜெட்டிலும் உண்மையாகியிருக்கிறது. ஆனால் அவர்களை அல்லாடவைக்கும் விதத்தில் இந்த பட்ஜெட் அமைந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அதே நேரம் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களையெல்லாம் பணத்தால் குளிப்பாட்டுகிறது பட்ஜெட். குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. துணை குடியரசுத்தலைவரின் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சம் ஆகிறது. ஆளுநருக்கு ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம். எம்.பிக்களுக்கும் ஆண்டுதோறும் சம்பளம் உயர்த்தப்படும் என்கிறது பட்ஜெட்.
மக்கள் கசக்கிப்பிழியப் படுவார்கள்
பட்ஜெட்டில் மக்கள் விரோத போக்கை விவரிக்கும் மொத்தத்தையும் சொல்வதென்றால் இடமும் இல்லை, நேரமும் இல்லை. தன் பிற்போக்குக் கருத்தியலால் இயல்பிலேயே மக்களுக்கு எதிரானதான பாஜக, அதன்படியே தயாரித்திருக்கும் இந்த 2018-19 ஒன்றிய பட்ஜெட், நாட்டின் 0.0001 சதவீதத்தினரான கார்ப்பொரேட்டுகளுக்காக, மீதிப் பேரைக் கசக்கிப் பிழியக் காத்திருக்கிறது என்றே குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.