அழகிரியால் எந்தெந்த தொகுதிகளில் திமுக பாதிக்கப்படலாம்...?
மதுரை: மு.க.அழகிரியால் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் திமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் திமுக கூட்டணியின் தோல்விக்கு முழு மூச்சாக பாடுபடத் தயாராகி வருகிறார்கள்.
ஸ்கெட்ச் போட்டு செயல்படுவதில் அழகிரி கில்லாடி என்பது திமுகவினருக்கே நன்றாகத் தெரியும் என்பதால் அழகிரியின் அடுத்தடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதில் மற்றவர்களை விட இவர்கள்தான் ரொம்ப ஆர்வமாக உள்ளனராம்.
வரும் தேர்தலில் பாஜக, மதிமுகவுக்கு ஆதரவாக அழகிரி தீவிரமாக செயல்படுவார். அதேசமயம், தேமுதிகவை அவர் கண்டு கொள்ள மாட்டார். தேமுதிக தோற்பதையே அவர் அதிகம் விரும்பவும் செய்வார் என்பது உறுதி.
சரி இதன் அடிப்படையில் அழகிரியால் எந்தெந்த தொகுதிகளில் திமுகவுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதைப் பார்க்கலாம்.
மதுரை
அழகிரியின் தலைமையகம். இங்கு திமுக சார்பில் வக்கீல் வேலுச்சாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேமுதிகவுக்காக நிச்சயம் அழகிரி தரப்பு வேலை செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிமுகவுக்கு மறைமுகமாக அழகிரி ஆதரவாளர்கள் வேலை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக தோற்க வேண்டும் என்பதே அழகிரியின் லட்சியம் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவர்கள்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லிலும் தேமுதிகதான் போட்டியிடுகிறது. திமுக சார்பில் காந்திராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். இங்கும் திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்படலாம் அழகிரி தரப்பு. ஆனால் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை.
சிவகங்கை
இங்கு பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக சுப. துரைராஜ் நிற்கிறார். ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இன்னொரு முக்கிய வேட்பாளர். இதில் ராஜாவுக்காக அழகிரி தரப்பு தீவிரமாக களம் இறங்கும். அழகிரியின் தளபதிகளில் ஒருவரான நடிகர் ஜே.கே ரித்தீஷ் மூலம் இங்கு ராஜாவுக்கு ஆதரவாக தீவிரமாக படை பலத்தைக் காட்ட தயாராகி வருகிறார் அழகிரி. எனவே இங்கு துரைராஜ் மட்டுமல்ல, கார்த்தி சிதம்பரத்துக்குமே கஷ்டம்தான்.
தேனி
இங்கு்தான் தனது முழு பலத்தையும் காட்டுவார் அழகிரி என்கிறார்கள். காரணம், இங்கு போட்டியிடுவது பொன் முத்துராமலிங்கம். மதிமுக சார்பில் அழகுசுந்தரம் இறக்கப்பட்டுள்ளார். முழுக் கவனத்தையும் இந்தத் தொகுதியிலும் செலுத்தி பொன் முத்துவை மண்ணைக் கவ்வ வைக்க தீவிரமாக முயல்வார் அழகிரி என்பதாலும், மறுபக்கம் அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதாலும் பொன் முத்து சுதாரிக்காவிட்டால் சறுக்கி விடும் வாய்ப்புண்டு.
விருதுநகர்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். எதிர்த்து திமுக சார்பில் எஸ். ரத்தினவேலு நிறுத்தப்பட்டுள்ளார். ரத்தினவேலுவுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று நேற்று ராஜபாளையத்தில் வைத்து சரமாரியாக கேட்டார் அழகிரி. வைகோ நேரிலேயே போய் அழகிரியைப் பார்த்து ஆதரவு கோரியுள்ளார். எனவே வைகோவின் வெற்றிக்காக தனது முழு சக்தியையும் இங்கு அழகிரி பயன்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. ரத்தினவேலு வெற்றி பெரும் சந்தேகம்தான்.
ராமநாதபுரம்
இது ஜே. கே.ரித்தீஷின் கோட்டை. இங்கு பாஜக சார்பில் குப்புராமு போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் முகம்மது ஜலீஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இங்கும் திமுக கூட்டணிக்கு எதிராக அழகிரி தரப்பு தீவிரமாக செயல்பட வாய்ப்புள்ளது.
தென்காசி
நீ எப்படி ஜெயிப்பே பார்க்கிறேன். என் சொந்தங்கள் இங்கு அதிகம். ஜெயிக்க முடியாது நீ என்று பகிரங்கமாகவே இங்கு போட்டியிடும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சவால் விட்டுள்ளா்ர் அழகிரி. எனவே மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் இப்போதே ஜெயித்து விட்டதாக மதிமுக தரப்பு உற்சாகமாகியுள்ளது.
நெல்லை
நெல்லையில் திமுக சார்பில் தேவதாச சுந்தரமும், தேமுதிகவும் இங்கு போட்டியிடுகின்றன. எனவே இங்கு அழகிரி தரப்பு அவ்வளவாக அக்கறை காட்டாது என்று நம்பலாம்.
கன்னியாகுமரி
இங்கு பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவருக்காக அழகிரி தரப்பு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று தெரிகிறது. அதேசமயம், அழகிரிக்கு குமரியில் பெரிய அளவில் ஆதரவு பலம், தாக்கம் இருக்கிறதா என்பது ஐயமே.
மதிமுக - பாஜக வேட்பாளர்கள் சந்திப்பு
இந்த நிலையில் அழகிரியை, சிவகங்கை பாஜக வேட்பாளர் எச். ராஜாவும், தேனி மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரமும் நேற்று மதுரையில் அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கோரினர்.