தென் தமிழகத்தை உலுக்கும் 'ஓகி' புயலின் பெயர் எப்படி வந்தது? #CycloneOckhi
Recommended Video
சென்னை: தென் தமிழகத்தை மிரட்டும் புயலுக்கு, 'ஓகி' என்று பெயர் வந்தது எப்படி என்பது ஒரு சுவாரசிய விஷயம்.
கன்னியாகுமரி அருகி ஓகி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நட்சத்திரம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி, வங்கதேசத்தை கடந்த மே மாதம் உலுக்கிய புயல் மோரா. இதற்கு தாய்லாந்து மொழியில், கடல்களின் நட்சத்திரம் என்பது பொருளாகும். ஒவ்வொரு நாடும் புயலுக்கு பெயர் சூட்டும் மரபு அடிப்படையில் தாய்லாந்து இந்த பெயரை சூட்டியிருந்தது.
வங்கதேசம் சூட்டிய பெயர்
இதையடுத்து, அடுத்ததாக அந்த மண்டலத்தில் உருவாகும் புயலுக்கு பெயர் சூட்டும் உரிமையை வங்கதேசம் பெற்றது. புதிதாக உருவாகும் புயலுக்கு 'ஓகி' என பெயர் சூட்டுவதாக வங்கதேசம் அப்போதே அறிவித்திருந்தது.
பெயர் சூட்டியாச்சு
அதன்பிறகு, இப்போதுதான் முதல் புயல் சின்னம் இந்த மண்டலத்தில் உருவாகியுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவித்தபடி புயலுக்கு ஓகி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் கன மழை
இந்த புயலின் தாக்கத்தால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு நோக்கி நகர்த்து கேரளாவின் தென் பகுதிகளிலும் நல்ல மழையை கொடுக்கும்.