மகளிர் மட்டும் வாக்குச்சாவடி... மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு... கலக்கும் தேர்தல் ஆணையம்
சென்னை: தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியை தேர்ந்தெடுத்து அதில் அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவரையும் பெண்களாக நியமிக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
வாக்குச்சாவடிக்கு பொதுமக்கள் சென்று ஓட்டு போடுவது எப்படி? வயதானவர்களுக்கு உதவுவது எப்படி? என்பது பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் நடித்து காண்பித்தனர். தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்று பேசினார்.
தமிழக சட்டசபை பதவிக்காலம் மே மாதம் 22ம்தேதி முடிகிறது. இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை திருத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட அழைப்பது என பல பணிகளை பரபரப்பாக செய்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவ,மாணவிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
வாக்குச்சாவடிக்கு பொதுமக்கள் சென்று ஓட்டு போடுவது எப்படி? வயதானவர்களுக்கு உதவுவது எப்படி? என்பது பற்றி மாணவ-மாணவிகள் நடித்து காண்பித்தனர்.இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்று பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் வந்து விட்டது. தமிழகத்தில் ஏற்கனவே 65 ஆயிரத்து 616 வாக்குச் சாவடிகள் உள்ளன. புதிதாக கூடுதல் வாக்காளர்கள் சேர்ந்துள்ளதால் கூடுதலாக 870 வாக்குச்சாவடிகளை அமைக்க தலைமை தேர்தல் கமிஷனில் அனுமதி கேட்டுள்ளோம்.
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் ஓரிருநாளில் அறிவிக்கும் என்று கூறினார்.
மகளிர் மட்டும் வாக்குச்சாவடி
தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியை தேர்ந்தெடுத்து அதில் அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவரையும் பெண்களாக நியமிக்க உள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கட்சி ஏஜெண்டுகளும் பெண்களாக இருக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளிடம் பேச உள்ளோம். பூத்தில் பாதுகாப்பு பணிக்கும் பெண் போலீசார் நிறுத்தப்படுவார்கள்.
எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்
வாக்குசாவடி நிலவரம் பற்றி அறிந்துக்கொள்ள 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் பூத் விவரங்கள் செல்போனில் விரிவாக வரும். அதை வைத்து வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
பறக்கும் படை சோதனை
ஒவ்வொரு மாவட்டத்தில் 3 அதிகாரிகள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபடுவார்கள்.
போலி வாக்காளர்கள் 6 லட்சம் பேர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல்
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்கள் பல்வேறு வகையில் செய்யப்பட உள்ளது. கிராமம் தோறும் டி.வி. திரை கொண்ட வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். சென்னையில் குறைந்த அளவு ஓட்டுப்பதிவு உள்ளதால் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறோம். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்று ராஜேஷ் லக்கானி கூறினார்.