இரட்டை இலை எனக்கே... இன்னும் 2 லட்சம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வேன் - தீபா
தேர்தல் ஆணையத்தில் இன்னும் இரண்டு லட்சம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க இன்னும் இரண்டு லட்சம் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்வேன் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிதறிப்போயுள்ள அதிமுகவினரின் இப்போதய ஒரே குறிக்கோள் அதிமுக என்ற கட்சியையும், கொடி, இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதுதான்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவரே உண்மையான அதிமுக என்பதை தொண்டர்கள் உணர்ந்து கொள்வார்கள். கட்சி தலைமை அலுவலகத்திற்கும் அவர்களே உரிமை கொண்டாட முடியும்.

லாரி லாரியாக பிரமாணப்பத்திரங்கள்
அதிமுக அம்மா அணியும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை லாரி லாரியாக பிரமாணப்பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

களமிறங்கிய தீபா
ஜூன் 15ஆம் தேதியன்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் தங்கள் பங்குக்கு 52,000 பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். கூடுதலாக தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் பெற்றுள்ள தீபா, தொண்டர்கள் தன் பக்கமே இருப்பதாகவும், மேலும் 2 லட்சம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்போவதாகவும் தீபா கூறியுள்ளார்.

தொண்டர்கள் ஆதரவு
எனக்கு எம்.பி,. எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லைதான் ஆனால் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறினார் தீபா. ஜெயலலிதா மரணத்தில் இருந்து இதுநாள் வரை தன்னை மட்டுமே அதிமுக தொண்டர்கள் நாடி வந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

நாடகமாடும் ஓபிஎஸ்
எம்எல்ஏக்களின் பணபேரம் பற்றிதான் இப்போது அதிகம் பேசுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடுகிறார். தனது நன்மைக்காகவே இப்போது பண பேர விவகாரத்தை தனது ஆதரவு எம்எல்ஏவை வைத்து பேச வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எத்தனை லட்சமோ?
இப்படியோ போனால் இன்னும் எத்தனை லட்சம் பிரமாணப்பத்திரங்களைத் தாக்கல் செய்வார்களோ? ஒரே நிர்வாகியே 3 அணிக்கு ஆதரவாகவும் பிரமாணப்பத்திரம் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியோ போனால் இன்னும் எத்தனை லட்சம் பிரமாணப்பத்திரங்கள் குவியப்போகிறதோ?












Click it and Unblock the Notifications