ஜெயலலிதாவின் சொத்துக்கள் வேண்டாம்... அவர் பேனா மட்டும் போதும் - தீபா
ஜெயலலிதாவின் சொத்துக்கள் எதுவும் தமக்கு வேண்டாம் என்று அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். அவர் உபயோகித்த பேனா மட்டும் தனக்கு போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று தீபா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தனக்கு எந்த சொத்துக்களும் தேவையில்லை என்றார்.
தனது சகோதரர் தீபக்கின் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார் என்றும் குற்றம் சாட்டினார். போயஸ் தோட்ட இல்லம் தனக்கும் தீபாவிற்கு மட்டுமே சொந்தம் என்று தீபக் கூறியதற்கு பற்றி பேசிய தீபா, எனக்கு சொத்துக்களின் மேல் ஆசையில்லை என்றார்.
சொத்து வேண்டாம்
தனது அத்தை ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டுமே போதும் என்றும் தீபா கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலும் போட்டியிடுவோம் என்றும் மாலையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.
தீபக் மனமாற்றம் ஏன்?
தனது சகோதரர் தீபக் பேசுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கூறிய தீபா, இதில் ஏதோ நாடகம் நடைபெறுவதாகவும், தீபக்கின் பின்னால் இருந்து யாரோ இயக்குவதாகவும் கூறினார்.
காலம் பதில் சொல்லும்
ஓ. பன்னீர் செல்வம் அணியினருடன் இணைவீர்களா என்று கேட்டதற்கு தற்போதைக்கு அந்த எண்ணம் எதுவும் இல்லை என்றும் காலம்தான் பதில் சொல்லும் என்றும் தீபா கூறினார்.
சசிகலா அணிக்கு தகுதியில்லை
அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்க சசிகலா உறவினர்களுக்கு தகுதியில்லை என்று கூறிய ஜெ. தீபா, முதல்வராக இருக்க எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்றும் தெரிவித்தார். சசிகலா அணியில் ஒருபோதும் சேரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.