திட்றீங்களா, திட்டிக்கோங்க, பாராட்டுறீங்களா, பாராட்டிக்கோங்க.. "எதார்த்தம்" இளங்கோவன்!
சென்னை: என்னை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் எனக்கு கவலையில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக குஷ்பு உடன் இளங்கோவன் போயிருப்பதாக தகவல் வெளியானாலும், ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் வெளியேறச் சொல்லி பேசியதனால்தான் கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இளங்கோவனை சோனியாகாந்தி கண்டித்துள்ளதாகவும் செய்திகள் பரபரக்கின்றன.
விமானம் டேக் ஆப்
இளங்கோவன் டெல்லி செல்லும் விமானம் டேக் ஆப் ஆனதுதான் தாமதம், இளங்கோவனை கண்டித்து ‘அன்னை சோனியாகாந்திக்கு நன்றி' என்று சென்னையில் போஸ்டர் ஒட்டிவிட்டனர்.
பிரசாரத்திற்கு வந்தேன்
ஆனால் இளங்கோவனோ, டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக வந்துள்ளேன் என்கிறார்.காங்கிரஸ் முதல்வர் வேட்பாளருடன் பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறேன்.இன்னும் 2 நாட்கள் இங்கு நான் பிரசாரம் செய்வேன் என்கிறார்.
கவலைப்படமாட்டேன்
தனக்கு எதிராக போஸ்டர்கள் ஓட்டுபவர்களை பற்றி தான் எதற்கும் கவலைப்படமாட்டேன் என்று கூறியுள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். போஸ்டர்கள் நல்லதுக்கும் ஒட்டுவார்கள், கெட்டதுக்கும் ஒட்டுவார்கள். என்னை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் கவலைப்பட மாட்டேன் என்கிறார்.
நிர்வாகிகள் நியமனம்
தமிழக காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள பொறுப்புகளில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தற்போது எதுவும் பேச முடியாது. தேர்தல் பணி நடந்து வருவதால் சோனியாகாந்தியையும், ராகுல்காந்தியையும் சந்தித்து பேச வாய்ப்பே இல்லை. தேர்தல் முடிந்த பிறகு அவர்களை சந்தித்துப் பேசுவேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.