ச்சும்மா நட்பு அடிப்படையில்தான் ஆளுநரைப் பார்த்தேன்.. தம்பிதுரை!
நட்பின் அடிப்படையிலேயே ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்ததாக லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: நட்பின் அடிப்படையிலேயே மரியாதை நிமித்தமாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்ததாக லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை அரசியலாக்க வேண்டாம் என்றும் தம்பித்துரை கூறினார்.
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. எந்நேரத்திலும் முதல்வர் மாறக்கூடும் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நட்பின் அடிப்படையிலேயே ஆளுநரை சந்தித்தேன் என்றார்.
நண்பர் என்ற காரணத்திலேயே மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் இந்த சந்திப்பை அரசியலாக்க வேண்டாம் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.