பேரவையை கலைக்கவில்லை.. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதி.. ஜெ. தீபா அதிரடி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை கலைக்கவில்லை என்றும் தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. அவரது தலைமையை ஏற்க விரும்பாத பல தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அரசியலில் இறங்கினார் தீபா. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார்.
இதனிடையே தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் பேரவையில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கிய அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தீபா. அப்போது அவர் கூறுகையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை கலைக்கவில்லை. தவறான செய்தியை பரப்பி அவதூறு கிளப்புகிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. இருப்பினும் இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்.
என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் ஆதரிக்கிறார்கள். என்னை அரசியலில் இருந்து விலக்க சதி நடைக்கிறது. என் கணவரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பின்னால் இருந்து சிலர் இயக்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.