ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு தொடங்கியது… தமிழகத்தில் இருந்து 965 பேர் பங்கேற்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான மெயின் தேர்வு இன்று இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 965 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 வகையான பணிகளில் உள்ள காலி இடங்களுக்கு யு.பி.எஸ்.சி என்று சொல்லப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, முதல்நிலை தேர்வு முடிவடைந்த நிலையில், மெயின் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

மொத்தம் 1079 பணிகளுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் தமிழகத்தில் 965 பேர் இந்த மெயின் தேர்வை எழுதுகின்றனர். இது கடந்த ஆண்டைவிட 100 பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.

இந்தத் தேர்விற்காக சென்னையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளி, லேடி விலிங்டன் கல்வி நிறுவனம், அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கட்டுரை தேர்வு நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.

இதை தொடர்ந்து 5 மற்றும் 6ம் தேதிகளில் பொது அறிவு தேர்வும், 7ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில கட்டாய தேர்வும் நடைபெறுகிறது. 9ம் தேதி விருப்பப்பாட தேர்வு நடைபெறும்.
மெயின் தேர்வுகளுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் டெல்லியில் நடக்கும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications