கிரானைட் ஊழல்களை விசாரிக்கும் சகாயத்துக்கு கொலை மிரட்டல்... பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் மனு
கிரானைட் ஊழல்களை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சென்னை ஹைகோர்ட்டில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: கிரானைட் ஊழல்களை விசாரித்து வரும் தங்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகார் மனு அளித்துள்ளார்.
மதுரையில் கிரானைட் முறைகேடு நடைபெற்று வருவதாக கடந்த 2013-ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணையை நடத்த உத்தரவிட்டது.
இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் 40 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விசாரணை நடத்தி, முறைகேடு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கிரானைட் ஊழல்
அதில், கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதில் ரூ.1.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறைகேட்டில் மத்திய, மாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிபிஐ விசாரணை
இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு சகாயம் மதுரை ஹைகோர்ட்டில் கோரினார். இந்நிலையில் சகாயத்துக்கும், அவரது உதவியாளருக்கும் யாரோ மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தததாக புகார் எழுந்துள்ளது.

ஹைகோர்ட்டில் புகார்
இதுகுறித்து சகாயம் தன்னுடைய புகார் மனுவில் கூறுகையில், தனக்கும் தன்னுடைய உதவியாளர் சேவற்கொடியோனுக்கும் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.

பாதுகாப்பு வேண்டும்
எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி சகாயம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications