வி.சேகர் சிக்கிய சிலை கடத்தல் வழக்கு: பெண் பத்திரிகையாளர் மாலதி கைது
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் பெண் பத்திரிகையாளர் மாலதி என்பவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட இயக்குநர் வி.சேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில் சிவன் - பார்வதி சிலை கடந்த ஜனவரி 6ம் தேதி திருடு போனது. அதேபோல திருவண்ணாமலை மாவட்டம் பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் 3 சிலைகளும், வந்தவாசி சவுந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்த 4 சிலைகளும் ஜனவரி 10ம் தேதி திருடுப்போயின. இதையடுத்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ‘‘பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் அதிக தொகைக்கு விற்பனை செய்யும் கடத்தல் கும்பல் ஒன்று சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் சிலைகளைக் கொண்டு வந்துள்ளது'' என்ற ரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த மே மாதம் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பையில் சிலையுடன் வந்த சென்னை தி.நகர் தனலிங்கம் என்பவரையும் அவரது நண்பர் கருணாகரனையும் கைது செய்தனர்.
தனலிங்கம் சினிமா தயாரிப்பு மேலாளர். கருணாகரன் அரசு அச்சகத்தில் பணிபுரிபவர். இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 7 சிலைகள் மீட்கப்பட்டன. சிலை கடத்தலில் பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகருக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பழங்கால கோயில் சிலைகளை திருடிக் கடத்த முயற்சித்த வழக்கில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கடந்த 12ம் இரவு கைது செய்யப்பட்டார்.
சிலை கடத்தல் வழக்கில் கைதான கருணாகரனின் சகோதரி மாலதி என்பவர் சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். சிலை கடத்தலில் வி.சேகருக்கு உள்ள தொடர்பு குறித்து அப்போது விளக்கமாக தெரிவித்தார். இதனையடுத்தே வி.சேகரை போலீசார் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
சேகரிடம் இருந்து 77 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டனர் இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சேகரின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாலதியை இன்று போலீசார் கைது செய்தனர். அவருடன் சில முக்கிய புள்ளிகளும் இந்த வழக்கில் சிக்கலாம் என தெரிகிறது.
மாலதி ஒரு மாத இதழில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். சிலை கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள கருணாகரனின் சகோதரி. கடந்த ஜனவரி 6ம் தேதி சிலையை திருடி காரில் கொண்டு வந்தபோது வந்தவாசி அருகே ரோந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் அந்த காரை பிடித்து சோதனை செய்துள்ளனர். தான் ஒரு கூட்டத்துக்குப் போய்விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாகவும், நிருபர் என்றும் அடையாள அட்டையை காண்பித்து அவர்களிடம் இருந்து மாலதி தப்பி வந்துள்ளார். போலீஸார் சோதனை செய்திருந்தால் சிலை கடத்தல் கும்பல் அப்போதே சிக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.