திட்டமிட்டு செயல்பட்டால் தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
கோவை : தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டால் மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளர்.
காந்தியவாதி சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் செல்வதற்காக கோவைக்கு இன்று (சனிக்கிழமை) விமானம் மூலம் வந்தார்.
அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது...
மதுவிலக்கை அமல்படுத்தப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. செல்போன் கோபுரம் மீது அவர் ஏறியதுமே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் அவரது உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். இந்த விவகாரத்தில், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிபெருமாளின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சிக் கொடி 3 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமானது தான்.
ஏனெனில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மதுவிலக்கு அமலில் இருந்தது. இப்போதும் மாநில அரசு சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டால் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை சீர்குலைக்கும் வகையில், சிலரின் தூண்டுதலின் பேரில் நடந்து கொண்டதால்தான் சேலம், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.