தேவை ஏற்பட்டால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும்: தம்பிதுரை
இரு அணி சார்பில் அமைக்கப்படும் குழு முடிவு எடுத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: தேவை ஏற்பட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதை லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை வரவேற்றார். இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலும், மக்களின் எதிர்பார்ப்பின் பேரிலும் இரட்டை இலையை மீட்பதற்காகவும் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைக்கு தயார் என்று எடப்பாடி கோஷ்டியினர் தெரிவித்தனர். சசிகலா, தினகரன் குடும்பத்தினர் கட்சியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களையவே இரு அணிகள் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம். கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களையவே முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
சசிகலா பொதுச் செயலாளராக தொடர்வது குறித்து இரு குழுக்களும் சேர்ந்து தான் முடிவு செய்யும். குழு முடிவு எடுத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். மக்களும் தொண்டர்களும் சில காரணங்களுக்காக தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியில் இருந்து தினகரன் ஒதுங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.