மது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- ராஜேந்திர பாலாஜி
மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் உயிரிழப்பார்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
2 வருடமா? 2000 வருடங்கள்
வரப்போகிற பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான வியூகங்களை முதல்வர் எடுத்து வருகிறார். விரைவில் பலமான கூட்டணி அமையும். 2 வருடம் அல்ல 2000 வருடங்கள் ஆனாலும் அதிமுகவின் இந்த ஆட்சி தொடரும்.
பெரிய குறைகள் இல்லை
மத்திய ஆட்சியை பொறுத்தவரை, பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடுதான் இருக்கிறார்கள். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள். குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக எதிர்கட்சிகள் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இது பிக்பாஸா?
கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டாவது ஜெயிக்கட்டும்... அதன்பிறகு பேசட்டும்... பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்திடலாம் என்று கனவு காண்கிறார். அது எடுபடாது" இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
உடம்பை கெடுத்து கொள்வர்
இந்த வருட தீபாவளி மதுவிற்பனை போன வருடத்தைவிட அதிகரித்துள்ளதே, இது அரசின் சாதனையா அல்லது மக்களின் வேதனையா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, "மதுவை நிறுத்தினால் எங்காவது எதையாவது குடிப்பார்கள். மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள். மது விற்க அரசு இலக்கு நிர்ணயிக்கவில்லை' என்று அமைச்சர் பதிலளித்தார்.