சென்னை ஐ.ஐ.டிக்கு எதிராக 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்! திமுக, வி.சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்!!
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக 3வது நாளாக கண்டனப் போராட்டங்கள் தொடருகின்றன. சென்னையில் இன்று தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். டெல்லியிலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்- பெரியார் பெயரில் மாணவர் அமைப்பு ஒன்று இயங்கி வந்தது. இந்த அமைப்பு பிரதமர் மோடியையும் இந்துத்துவாக கொள்கைகளையும் விமர்சித்ததாக கூறி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ஒரு அனாமதேய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இத்தகைய பிளவுபடுத்தும் கருத்துகளை பரப்பும் அமைப்பு தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறு ஐ.ஐ.டி. இயக்குநருக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை விடுத்திருந்தது. இதனடிப்படையில் அம்பேத்கர்-பெரியார் பெயரிலான அமைப்புக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்தது.
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வீடு முன்பாக மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
தி.மு.க மாணவர் அமைப்பு
சென்னையில் கடந்த 3 நாட்களாக ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இன்று தி.மு.க. மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள. புகழேந்தி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அம்பேத்கர்- பெரியார் அமைப்பு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதன் பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நூற்றுக்கணக்கான தி.மு.க. மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.
திருமா தலைமையில்..
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பினரும் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐ.ஐ.டியை முற்றுகையிட விடுதலைச் சிறுத்தைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால் அனுமதி மறுத்த போலீசார் திருமாவளவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.
இதேபோல் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் இன்று ஐ.ஐ.டி.யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில்..
ஐ.ஐ.டி. நிர்வாகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைக் கண்டித்து டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை, திருச்சி. திருவாரூரில்..
இதேபோல் இளைஞர் பெருமன்றம், புரட்சிகர மாணவர் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம் ஆகியவற்றின் சார்பில் மதுரை, திருச்சி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களிலும் சென்னை ஐ.ஐ.டி.யைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டங்களால் ஐ.ஐ.டி. முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.