என்னமோ, ஏதோ.. இந்த "ஜெயலலிதா சபதம்" நியூஸ் இப்போ நினைவுக்கு வந்தது!
சென்னை: திமுகவில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. அழகிரிக்கும் இடையேயான மோதல் முற்றியிருக்கிறது.. திமுகவை விட்டே அழகிரி நிரந்தரமாகவே நீக்கப்படலாம் என்கிற நிலையில் அவர் அடுத்து என்ன செய்வார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
திமுகவில் அடுத்த தலைவராக கருணாநிதியின் இளைய மகன் மு.க. ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதை மூத்த மகன் மு.க. அழகிரி விரும்பவே இல்லை. இதனால் பல ஆண்டுகாலமாக திமுக, ஸ்டாலின் ஆதரவாளர்கள், அழகிரி ஆதரவாளர்கள் என கூறுபட்டு நிற்கிறது.
இந்த உள் மோதல் அவ்வப்போது வெடிப்பதும் பின்னர் ஓய்வதுமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது முற்றி கிளைமாக்ஸை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
அனேகமாக அழகிரி திமுகவே விட்டு நிரந்தரமாக நீக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2008-ல் ஜெயலலிதா சபதம்
அப்படியான எதிர்பார்ப்பில் சிக்கியதுதான் இந்த பழைய செய்தி.. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதியன்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கொடுத்த பதில் அறிக்கை இது. அந்த அறிக்கையில் எப்படி என்ன சபதமேற்றிருக்கிறார் ஜெயலலிதா? அதற்கும் இப்போதைய மு.க. அழகிரி விவகாரத்துக்கும் என்ன தொடர்பு? என்கிறீர்களா? இதுதான் அந்த அறிக்கை:
ஜெ. வந்தாலும் சேர்ப்போம்- கருணாநிதி
ஜெயலலிதாவின் அறிக்கை விவரம்: "ஜெயலலிதா மீது கூட தான் வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்" என்று அதிகார மமதையில், அகங்காரத்தில் மற்றொரு கேள்விக்கு பதிலளித்து இருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியும் குடும்பமும் அதிமுகவில் சேரும்- ஜெ.
கருணாநிதியும், கருணாநிதி குடும்பத்தினரும் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது.
அதிமுகவிடம் பண உதவி வாங்கிய மு.க. முத்து
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் உதவி பெற்றதெல்லாம் அதிகார போதையில் இன்று கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!
அதிமுகவில் இணையச் சொன்னது நடந்தே தீரும்..
அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க இடிஅமீன் கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப் போகிறது, அதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. அப்போது கருணாநிதி, அவரின் குடும்ப உறுப்பினர்கள், கருணாநிதியின் துதி பாடுபவர்கள், பாதவருடிகள் எல்லாம் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இது நிச்சயம் நடந்தே தீரும். இதனை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இன்று திமுகவில் நடப்பதைப் பார்த்தால் அன்றைய ஜெயலலிதாவின் சபதமும் நிறைவேறிவிடும் போல..