போரூர்: கட்டிட இடிபாடுகளுக்கிடையே 10 குழந்தைகள் உட்பட மேலும் 40 பேர் சிக்கியுள்ளனர்?
போரூர்: கட்டிட இடிபாடுகளுக்கிடையே 10 குழந்தைகள் உட்பட மேலும் 40 பேர் சிக்கியுள்ளனர் ?
சென்னை: போரூர் கட்டிட இடிபாடுகளுக்குள் 10 குழந்தைகள் உள்பட மேலும் 40 பேர் சிக்கி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் பெய்த இடியுடன் கூடிய மழையில், போரூர் மவுலிவாக்கம் அருகே கட்டப்பட்டு வரும் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமான ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். எனவே, இடிபாடுகளில் சிக்கி பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியாகியிருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணி...
மீட்புப்பணிகள் போர்க்கால அவசரத்தில் கடந்த 5 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்கிடையேயிருந்து துர்நாற்றம் வருவதால் உள்ளே மேலும் சடலங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதிர்ச்சி...
கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து யூகிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் பேர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அக்கம்பக்கத்தார் தகவல்...
இன்னும் இடிபாடுகளுக்கிடையே 40க்கும் அதிகமானோர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளாக இருக்கலாம் என இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை...
இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் விபத்து நடந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் விபத்து குறித்த தகவல் மைய அதிகாரிகளிடம் ‘‘எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த 9 பேரை காணவில்லை. அவர்கள் இந்த கட்டிடத்தில் தான் வேலை செய்தார்கள். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்'' என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மறுப்பு...
உடனடியாக அவர்களை அதிகாரிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அடையாளம் தெரியாமல் வைக்கப்பட்டு இருந்த 20 உடல்களை காட்டினர். ஆனால் அதில் யாரும் தங்களுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என அவர்கள் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
காணவில்லை...
மேலும், ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சீமாத்தலம் என்பவரும், ‘‘தங்களது உறவினர்கள் சச்சிநாராயணன் (வயது 50), அவருடைய மனைவி ஜெயம்மா (40), வாலிபர் திருப்பதி ஆகிய 3 பேரையும் காணவில்லை, அவர்கள் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?'' என்று தகவல் மைய அதிகாரிகளிடம் கேட்டார்.
அடையாளம் தெரியாத உடல்கள்...
அதிகாரிகள், அவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிணங்களை காண்பித்தனர். அதில் தங்களது உறவினர்கள் யாரும் இல்லை என்று சீமாத்தலம் கூறினார்.
40 பேர் ?
இதையடுத்து உறவினர்களால் தேடப்பட்டு வரும் மேற்கண்ட நபர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் கட்டிட இடிபாடுகளில் மேலும் 40 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கட்டிடத்தின் அடித்தளம்...
தற்போது வரை 50 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு உள்ளது. தரைத்தள கட்டிட இடிபாட்டு பகுதி இன்னும் அகற்றப்படவில்லை. ஏனெனில் இடிந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் தான் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். எனவே அந்த இடிபாடு பகுதிகளை அகற்றம் செய்யும்போது மேலும் பல உடல்கள் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.