அன்புச் செழியனிடமிருந்து ரூ.77 கோடி பறிமுதல்.. ரூ. 300 கோடிக்கு வரி ஏய்ப்பு.. ஐடி அறிக்கை
பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிகில் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் திடீரென அந்தப் படத்தை எடுத்த ஏஜிஎஸ் குழுமம், பைனான்ஸ் செய்த அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தில் நேற்று அதிரடி சோதனையில் வருமானவரித்துறையினர் இறங்கினர்.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக நெய்வேலியில் ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யையும் அங்கிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரது வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. இப்படி அவசரம் அவசரமாக விஜய்யை கூட்டி வந்து ரெய்டு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அறிக்கை வெளியீடு
இந்த ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. டெல்லியில் இருந்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 5-2-2020 அன்று தமிழ்த் திரையுலகின் முக்கியஸ்தர்களான தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர், அவரது விநியோகஸ்தர், பைனான்சியர் ஆகியோரது இருப்பிடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் வெளியான படம் ஒன்று ரூ. 300 கோடி வசூலித்து பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இவர்களது இருப்பிடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை மற்றும் மதுரையில், மொத்தமாக 38 இடங்களில் சோதனை நடைபெற்றது.
ரூ. 77 கோடி பறிமுதல்
இந்த சோதனையின் முக்கிய அம்சமாக, சம்பந்தப்பட்ட பைனான்சியருக்கு சொந்தமானதாக கருதப்படும் ரூ. 77 கோடி பணம், சென்னை, மதுரையில் உள்ள பல்வேறு மறைவிடங்கள், ரகசிய இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அடமானமாக பெறப்பட்டிருந்த பெருமளவிலான சொத்து ஆவணங்கள், பிராமிசரி நோட்டுகள், முன்தேதியிட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வரி ஏய்ப்பு
சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 300 கோடிக்கும் கூடுதலாக வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். விநியோகஸ்தருக்கு சொந்தமானதாக கருதப்படும் அனைத்து ஆவணங்களும் அவரது நண்பரின் மறைவிடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
|
தயாரிப்பாளரின் ஆவணங்கள் மீது விசாரணை
சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் திரைப்பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார். பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். அவர்களது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள், ரிசிப்ட்டுகள் உள்ளிட்டவையும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
விஜய்யின் சொத்துக்கள்
சம்பந்தப்பட்ட நடிகர் முதலீடு செய்துள்ளஅசையாச் சொத்துக்கள், அவர் தயாரிப்பாளரிடமிருந்து பெற்ற ஊதியம் ஆகியவை இந்த சோதனையின் முக்கிய அம்சமாக விசாரணையில் உள்ளன. தொடர்புடைய சில இடங்களில் சோதனையும் தொடர்கிறது என்று வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யிடம் எதுவும் சிக்கவில்லை
இதற்கிடையே, விஜயிடம் இருந்து எந்த விதமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜயிடம் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. அன்புச்செழியன், ஏஜிஎஸ் மட்டும்தான் வருமான வரித்துறை வலையில் சிக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.