தலைமை செயலகத்தில் வருமான வரி சோதனை நடத்தியது ஆளும் கட்சியை அச்சுறுத்தும் செயல்: சரத்குமார்
மத்திய அரசின் திடீர் வருமான வரி சோதனை அச்சுறுத்தும் செயலாக இருக்கிறது என்று சரத்குமார் கூறியுள்ளார்.
திருச்சி: தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் திடீரென வருமான வரி சோதனை செய்திருப்பது ஆளும் கட்சியை அச்சுறுத்தும் செயலாக இருக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
திருச்சி சமயபுரம் நெ.1டோல்கேட் அருகே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அக்கட்சியின் நிறுவனரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் பயணம் செய்தவர் சசிகலா. அரசியல் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் நன்கு தெரிந்தவர். மறைந்த முதல்வருடன் அனைத்து நிகழ்விலும் உடன் இருந்தநவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக வந்தால் தான் கட்சி சிறப்பாக இருக்கும்.
கணக்கில் வராத கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்துவது தவறு இல்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் திடீரென வருமான வரி சோதனை செய்திருப்பது ஆளும் கட்சியை மட்டுமல்லாமல் அனைவரையும் அச்சுறுத்தும் செயலாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.