பாம்பு கடியால் ஆண்டுக்கு 10,000 பேர் மரணம்.. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
பாம்பு கடியால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதாக ஆராய்ச்சியாளர் கூறியிருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியைகிளம்பியுள்ளது.
நெல்லை : பாம்புக் கடியால் மட்டும் நாட்டில் ஆண்டுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக இந்தியாவின் பாம்பு மனிதன் ரோமுலெஸ் விட்டேகர் கூறியிருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் ரோமுலஸ் விட்டேக்கர். இந்தியாவில் குடியேறிய அவர் இந்தியாவின் பாம்பு மனிதன் என்று அழைக்கப்படுகிறார். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பாம்புகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பாம்பு கடியால் ஏற்படும் இறப்பை குறைக்கும் முயற்சி குறித்தான பயிற்சி முண்டந்துறையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு இன்று முதல் இரண்டு நாட்கள் பயிற்சி நடக்கிறது. இதற்காக நெல்லை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பாம்பு கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இங்கு மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். இதில் மகாராஷ்டிரம், தமிழகம், ஓடிசா, பீகார், மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாம்புகளை குறித்த அறிவை புகட்டும் வகையில் மும்பையை சேர்ந்த யுஎஸ்வி என்ற அமைப்புடன் சேர்ந்து பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நம்பிக்கை
தமிழகத்தில் நெல்லையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் பாம்பு கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என நம்புகிறேன். பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுதான் சிறந்தது.
பெருமை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தான் ராஜநாகம் உள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும். சாதாரணமாக பாம்புகள் யாரையும் தீண்டாது. சத்தம் கேட்டவுடன் ஓடி ஓளிந்து கொள்ளும். அதை தொடர்ந்து துன்புறுத்தினால் தான் தாக்கும்.
துன்புறுத்தாதீர்கள்
எனவே பாம்புகளை கண்டால் அதை துன்புறுத்தாமல் விலகிச் செல்லுங்கள். பாம்பு போன்ற சாதுவான ஊர்வன இனம் கிடையாது, அவற்றை சீண்டுவதால் மட்டுமே நமக்கு ஆபத்தாக வந்து முடிந்துவிடும், என்று அவர் தெரிவித்தார்.