சந்தோஷ சாதனைச் செய்தி.. போலியோ அறவே இல்லாத நாடாக உருவெடுத்தது இந்தியா!
சென்னை: தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ தாக்காததால், போலியா இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு இன்று அறிவிக்க உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமான, சந்தோஷமான செய்தியாகும். மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த, அயராத பாடுபட்ட உழைப்புக்குக் கிடைத்துள்ள பலன் இது.
இந்நோயைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
ஆண்டுதோறும் ஒரு லட்சம் குழந்தைகளுக்குப் பாதிப்பு
முன்பு இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வரை போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இடையறாமல் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள்
போலியோவை முற்றிலுமாக ஒழிக்க தொடர்ந்து இலவச போலியோ சொட்டு மருந்து முகாம்களை நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நடத்தி வந்தன.
ஆண்டுக்கு ரூ. 1000 கோடி செலவு
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடி செலவளித்தது. ஆண்டு ஒன்றுக்கு 5 முதல் 6 தடவை வரை நடத்தப்படும் போலியோ ஒழிப்பு முகாம்களில் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
கட்டுக்குள் வந்த போலியோ
இந்தத் தொடர் முயற்சிகள் காரணமாக போலியோவின் தாக்கம் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக ஒரே ஒரு குழந்தைக்குத்தான்
இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதிதான் ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை.
அறிவிப்பு...
ஒரு நாட்டில் 3 ஆண்டுகள் போலியோ பாதிக்கவில்லை என்றால் மட்டுமே அந்த நாட்டை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், தற்போது இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது.
இருந்தாலும் வெளியிலிருந்து பரவலாம்.... எச்சரிக்கை
போலியோ இல்லாத நாடாக தற்போது மாறியிருந்தாலும், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இது முற்றிலும் ஒழிக்கப்படாததால் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சோமாலியாவாலும் ஆபத்து உள்ளது
சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும் போலியோவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.