மது பாட்டிலில் பூச்சி... நல்ல "சரக்கு" கொடுக்க துப்பு இல்லாத அரசு.. குடிகாரர்கள் குமுறல்
திருச்சி: பணம் கொடுத்துதானே மது வாங்குகிறோம். எங்களிடம் கொள்ளை கொள்ளையாக பணத்தை வாங்கிக் கொண்டு பூச்சி மிதக்கும் மதுவை விற்கிறார்கள் என்று திருச்சியில் மது வாங்க வந்தோர் புலம்பி குமுறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 10229 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையில் சிலர் மது வாங்கியபோது அதில் பூச்சிகள் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மது பாட்டிலுக்கு பில் தருமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் கடைக்காரர்கள் தர மறுத்து விட்டனர்.
இதையடுத்து பல்வேறு பத்திரிகை அலுவலகங்களுக்குப் போன் செய்து செய்தியாளர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் வரவழைத்தனர். அந்த பாட்டில்களைக் காட்டி புலம்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களை போன்றவர்களின் பணத்தை வைத்துத்தான் இந்த அரசாங்கம் நடைபெறுகிறது. இந்த டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 30,000 கோடி ருபாய் வருவாய் ஈட்டும் அரசாங்கம், எங்களுக்கு உண்மையான சுத்தமான மதுவை கொடுப்பது இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
இந்த மதுவைத் தயாரித்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், இவ்வளவு மிக மட்டமாக மது தயாரித்த நிறுவனத்தின் மீதும், அதை விற்பனை செய்த இந்த டாஸ்மாக் கடையை நடத்தும் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போகிறோம் என்று குமுறினர்.
தமிழக அரசே.. "அம்மா" கட்சியினரே.. யாரை வேண்டுமானாலும் பகைச்சுக்கோங்கப்பா.. ஆனா குடிக்கிறவர்களை மட்டும் பகைச்சுக்காதீங்க.. மொத்தமும் நஷ்டமாயிரும் பிறகு!